Wednesday, December 14, 2016

புயலில் ஏன் விழுந்தன மரங்கள் ?

புயலில் ஏன் விழுந்தன மரங்கள் ?
சென்னையில் நேற்று போட்டுத்தாக்கிய "வர்தா" புயலுக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டதாக செய்திகளில் பார்த்தோம்....
அந்த மரங்களை யாராவது சற்று உற்று கவனித்தீர்களா ?...
அந்த மரங்கள் அனைத்தும் இந்த மண்சார்ந்த இயல்மரங்கள்தானா ?
அல்லது இந்த உலகில் ஏதோ ஒரு பகுதியிலிருந்து எப்போதோ, யார்மூலமோ , எந்தக்காரணத்தினாலோ இங்குவந்து சேர்ந்த அயல்மரங்களா ?....
இந்தமண்ணின் மரங்கள் அவ்வளவு எளிதில் விழ வாய்ப்பில்லை...
அப்படியே விழுந்தவைகள்கூட வேர்ப்பிடிப்பு பகுதிகளில் காங்கிரீட் போன்றவைகளால் அதாவது மனிதக் காரணங்களால் வழுவிழந்தவைகளாக இருக்கும்...
விழுந்தவைகளில் பெரும்பாலானவை தூங்குமூஞ்சி,மே ஃபிளவர் போன்ற அன்னிய மரங்களாகத்தான் இருக்கும்....
மற்ற இழப்புகளைத்தான் இழப்புகளாகப் பார்க்கிறோம் மரங்களின் இழப்பு தீவிரமாக நம்மை பாதிப்பதில்லை.அவற்றை இன்னும் பலர் உணரவில்லை.அவை இந்த அளவு வளர எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ? அதுசெய்த வேலைகளை இனி யார் செய்வார் ?....
உணவைக்கூட தொழிற்கூடங்களில் தயாரித்துவிடலாம் ஆனால் காற்றை. காற்றிலுள்ள உயிர்வளியை யார் உருவாக்க முடியும் ? கரியமிலவாயுவை இனி யார் ஆக்ஸிஜன் என்கிற உயிர்வளியாக மாற்றுவார் அல்லது மாற்றமுடியும்?
விழுந்த மரங்கள் குறைத்த புவிவெப்பத்தின் பங்கை யார் இனிக் குறைப்பார்கள்?...
இதையெல்லாம் கணக்கிட்டால் மனிதனின் பொருளாதாரக்கணக்கினால் மதிப்பிடவேமுடியாது!...
இனி அந்த இடங்களில் மீண்டும் மரங்களை நடுவார்களா ? அப்படியே நட்டால்கூட இந்த மண்ணின் மரங்களை நடுவார்களா ?இதை யார் நடக்கூடிய மனிதர்களுக்கு எடுத்துச் சொல்வது ?....
சரி ஏன் அயல் மரங்களை நடக்கூடாது ?
ஒருமரம் இருந்தால் முதலில் உயிர்ச்சூழலை பேணக்கூடியதாக இருக்கவேண்டும்.அதாவது அந்தத் தாவரங்கள் மற்ற ஏனைய உயிரினங்களுக்கு உணவாகவோ அல்லது இருப்பிடங்களாகவோ இருக்க வேண்டும். அயல்மரங்களில் பெரும்பாலானவற்றில் மற்ற உயிரினங்களுக்கு உணவு கிடைப்பதில்லை மேலும் அவற்றில் வசிப்பதும் இல்லை! இதுவரை கவனிக்கவில்லையெனில் இனி கவனியுங்கள்...
சரி அவைகள் கெட்ட மரங்களா ? அப்படியெல்லாம் முடிவெடுக்க முடியாது அவற்றின் பூர்வீகத்திற்கேற்ற மரங்கள் அவை அந்த மண்ணிற்கும்,அந்த தட்பவெப்ப சூழலிற்கும் அங்குமட்டும் காணப்படும் உயிரினங்களுக்கும் ஏற்றவைகள் அவை எனவே அந்தப்பகுதிக்கு மிக நன்மை செய்யும் மரங்களே...
சரி இதற்காக என்ன செய்ய வேண்டும் ? புயலில் விழுந்த மரங்களை யாராவது கணக்கெடுத்து அரசிற்கு அறிக்கையாகக் கொடுத்தால் என்றாவது இந்தநிலைமாறும்.
இந்தமண்ணின் மரங்களை இனியாவது நடப்பட ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவாவது உதவும்...
நமது மரங்கள்தான் இந்த மண்ணிற்கும் தட்பவெப்ப சூழலிற்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்றவையாக இருப்பதோடு ஒன்றிற்கொன்று பயனாகவும் இருக்கும்.மரங்கள் உணவையும் இருப்பிடத்தையும் தரும் மற்ற உயிரினங்கள் மரங்கள் பரவ விதைபரவலில் உதவும்... 
நம் மரங்கள் தாமதமாகத்தான் வளரும் ஆனால் நீண்டநாட்கள் நிலைத்துநின்று பயனளிக்கும்.ஆனால் அயல்மரங்கள் விரைவாக வளரும் விரைவாக விழுந்துவிடும் கவனியுங்கள் தெரியும்!...
புயலால் மனிதனால் உருவாக்கி கட்டிடங்களை இழந்தால் அது அந்நாட்டிற்கு மட்டும் சிறிய பாதிப்பு அவற்றை விரைவில் கட்டிவிடலாம்.ஆனால் மரங்களை இழந்தால் இந்த உலகிற்கே பாதிப்பு அந்த இழப்பின் வெற்றிடத்தை உடனே சரிசெய்ய முடியாது அதற்கான விஞ்ஞானமும் நம்மிடம் இல்லை...
உணர்ந்து மரங்களை மதிப்போம்!
(ஒருவேண்டுகோள்:பத்திரிக்கை நண்பர்கள் இதுபற்றி முக்கியத்துவம் கொடுத்துஎழுதுங்கள்ளேன்)
நன்றி: Ramamurthi Ram
Hr. Ravi.

Total Pageviews

Followers