Wednesday, March 28, 2012

ஆன்மீகம்



ஆன்மீகம் என்றால் பொதுவாக ஆசிரமம், மடம், கோவில் போன்ற இடங்களில் போதிக்கின்ற கொள்கை என்று எண்ணுகின்றனர். சரியை, கிரியை, ஓகம், ஞானம் என்பதும் ஆன்மீகமாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஆன்மீகத்திற்க்கு செல்லும் வழியே ஆகும். ஆன்மீகம் என்பது கடவுள் கொள்கையோ, கடவுள் மறுப்பு கொள்கையோ இல்லை. கடவுள் கொள்கைகளை மறுக்கும் போது ஆன்மீகத்தை சேர்த்தே மறுக்கின்றனர். ஆன்மீகம் ஆத்திகத்திற்க்கும், நாத்திகத்திற்க்கும் அப்பாற்பட்ட இயற்கை உண்மை ஆகும். சித்தர்கள் கடவுள் ஏற்பு அல்லது கடவுள் மறுப்பு செய்வதில்லை இரண்டுமே முட்டாள்தனம் என்கிறார்கள். ஆன்மீகம் முழுக்க முழுக்கப் பகுத்தறிவு கொள்கையாகும். ஒரு நகர மக்களின் வாழ்வியல்முறை, பண்பாடு, கலை, பழமை, புதுமை இவற்றை விளக்குவது நாகரீகம் எனப்படும். அதே போல் இயற்கை இயல், ஆற்றல், உயிர், மனம், செயல், விளைவு பற்றிய விளக்கங்களை கூறுவது ஆன்மீகம் எனப்படும். உயிர் விளக்கம் என்பது எல்லா உலக மக்களுக்கும் பொதுவானது. அது போல் ஆன்மீகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கடவுள் கொள்கைகள் நாட்டிற்கு நாடு, இனத்திற்கு இனம் மாறுபடுகிறது. ஆனால் ஆன்மீகம்  மாறுபடுவது இல்லை.கடவுள் கொள்கை இருக்கும் இடத்தில் கடவுள் மறுப்பு கொள்கைகளும் இருக்கும். கடவுள் கொள்கைவாதிகளும், கடவுள் மறுப்பு கொள்கைவாதிகளும் உண்மை ஆன்மீகத்தை  புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர். ஒவ்வொரு உயிருக்கும் மூலமாகவும், இயக்கமாகவும் உள்ள உண்மை பொருளே ஆன்மீகம். அது வான் காந்தமாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த காந்த ஆற்றலிருந்தது ஒலி, ஒளி, ஓசை, வெப்பம் வெளிப்படுகிறது. இவற்றின் ஏற்றத்தாழ்வுகளே பஞ்தபூதங்களாக மாறுகின்றன.இந்த பூதங்களின் மாறுபாடுகளே உயிரினங்களின் தோற்றம், மறைவு, இயக்கத்திற்கு காரணம். இதை சித்தர்கள் வான் காந்தத்தை பரம் (பரமான்மா) என்றும், அதிலிருந்து  தோன்றிய  உயிர்களை அபரம்( சீவான்மா) என்று  கூறினார்கள்.

 "பரமாகிய சக்தியுள் பஞ்சமா புதம்
தரமாறிடில் தோன்றும் பிறப்பு".

                                          ஒளவை.

இந்த ஆன்மாக்களுக்கு அறிவு, மனம், செயல்பாடு, விளைவு உண்டு இவற்றை பற்றிய விளக்கமே ஆன்மீகம் என்றனர். உயிர், மனம், அறிவு, செயல், விளைவு இவற்றை வேண்டாம் என்றும், இல்லை என்றும் கூற முடியாது. இதில் கடவுள் கொள்கை ஏதும் இல்லை.ஆத்திகமோ, நாத்திகமோ இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உண்மையான பகுத்தறிவு கொள்கை மீது கட்டபட்ட குடிசைகளே மதங்கள், சமயங்கள், கடவுள் கொள்கைகள்,  கடவுள் கொள்கைகள்  கடவுள் மறுப்பு கொள்கைகள், வேத புரானங்கள் ஆகும்.  இவற்றை தகர்க்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றோம். ஏனெனில் இவைகள் பழமையானது மட்டுமல்ல இவை இடிந்து மக்களைக் கொல்லும் நிலையில் இருக்கின்றன. ஆன்மீகம் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் கற்பனைகளின் விளைவுகளே. விளக்கமாகாதது அகநிலை(நாத்திகம்). விளக்கமானது புறநிலை(ஆத்திகம்). அறிவும், மனமும் உயிரின் அகநிலை.சொல்லும், செயலும் புறநிலை. அகம், புறம் இயற்கையின் உண்மையாகும். இவற்றின் விளக்கமே திருமந்திரம் முதல் திருவருட்பா வரை கூறப்படுகின்றது. உண்மைகளுக்காக வாதம் செய்ய வேண்டியதில்லை ( ஆத்திகம்). பொய்களுக்காக எவ்வளவு வாதம் செய்தாலும்  அது முடிவுக்கு  வரவே வராது( நாத்திகம்). உயிர்நிலை, மனநிலை,செயல்நிலை பற்றி அறியாதவர்களிடம் மனிதநேயம் உருவாக வாய்ப்பில்லை. ஆன்மீகம் என்பது மனித நேயக் காப்பாகும். ஆன்மிகத்திற்கு ஆட்சியோ, அதிகாரமோ தேவையில்லை. ஆன்மீனம் யாரையும் கட்டுப்படுத்தும் கொள்கை இல்லை. ஒரு பொருள் இருக்கின்றது என்பவன் அதை உணர வைக்க வேண்டும். இல்லை என்பவன் அதை நிரூபிக்க வேண்டும். விளக்கி காட்ட முடியாத ஒன்றை இருக்கின்றது என்றோ, இல்லை என்றோ கூறுவது முட்டாள்தனமானதாகும். வெறும் கடவுள் மறுப்பு மட்டும் பகுத்தறிவு ஆகாது. வெறுப்பது, கோபப்படுவது, தண்டனை தருவது போன்ற தீவிர செயல்கள் பகுத்தறிவு அல்ல. அண்டம், பிண்டம், உயிர் பற்றிய அறிவு,  உடல் பற்றிய அறிவு இவற்றை சந்தேகமற கற்று தெளிதலே ஆன்மீக கல்வி ஆகும். ஆன்மீகம் என்பது தன்னை அறிதலாகும். பிறரிடம் கை கட்,டி வாய் மூடி, மெளனியாய் பெற்றுக் கொள்ளும் பொருள் இல்லை. மக்களின் ஏற்றத்தாழ்வான வாழ்க்கை, சாதி, சமயம்,மதங்கள், துறவிகளின் செயல்கள் பற்றி விமர்சனம் செய்வது ஆன்மீகம் அல்ல. புற அறிவையும், அக அறிவையும் அறிதலே ஆன்மீகம். ஆத்திமோ, நாத்திமோ ஒருவரை செம்மைபடுத்தாது. ஆன்மீகம் ஒன்றினாலே மட்டுமே முடியும் என்பதை அறிவோம்.  அறியாமைக்குள் மூழ்கித் தூங்கிக்கிடப் பேரை எழுப்புவது கடினம் தான். ஆனாலும் எப்படியாவது அவர்களை விழிப்படைய செய்ய வேண்டியது ஒவ்வொரு ஆன்மீகவாதியின் கடமையாக இருக்கிறது.

"தன்னை அறிதலே அறிவு
மற்றெல்லாம் பேயறிவு ஆகுமடி"

                                                    வள்ளல்


"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

                                                              வள்ளுவர்


"தன்னை யறிய தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறிவை அறிந்தவன் பின்
தன்னை அர்ச்சிக் தானிருந் தானே"

                                                          திருமூலர்
                     

No comments:

Post a Comment

Total Pageviews

Followers