Wednesday, March 28, 2012

சிவவாக்கியர் காட்டும் இராம நாமம்






"அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப்  பனங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தை ராம  ராமராம ராமஎன்னும் நாமமே"


                                                             என்கிறார் சிவவாக்கியர்

இப்படிபட்ட மேன்மை உடையதா இராம நாமம்? என்று சிந்திப்போம்

அரே ராம அரே ராம என்று சொல்லியும், சிறீ ராம செயம் என்று எழுதி வருவதையும், சிலர் இராம இராச்சியம் அமைய வேண்டும் என்று முழங்கி வருவதையும் நாம் அறிவோம். இப்படிபட்ட ராமன் யார்?

 வால்மீகி என்பவர் வடமொழியில் இராமாயணம் என்னும் காவியம் எழுதினார். அதில் இராமன் தெய்வப் பிறப்பாக பிறந்து, இராவணன் என்னும் அரக்கனைக் கொன்று அரசபை ஏற்று, இந்த நாட்டை ஆண்டதாக கூறப்படும் செய்தியை நாம் அறிவோம். இராம நாமத்தை போற்றும்படிக்கு அவர் என்ன செய்தார் என்பதை காண்போம். இராமன் தசரதனுக்கு மகனாய் பிறந்து, 14 வருடம் கானக வாழ்வு வாழ்ந்து, சீதையை மணம் புரிந்து, மீண்டும் கானக வாழ்வு வாழும் போது இராவணனால் மனைவியை இழந்து, மீண்டும் மனைவியை மீட்டு அயோத்தி சென்றடைந்தார் என்று இராமாயணம் கூறுகிறது.

இராமாயணத்தில் இராமன் குணம் எடுத்துக் காட்டபடுகிறது. இராமன் தன் மனைவியை ஒத்த மார்பகம், கூந்தல் உள்ள பெண்களை கண்டால் வெறுப்பதும், மேற்படி மார்பகம், கூந்தல் அறுப்பவர் என்றும், (சூர்ப்ப நகையை  இவ்வாறு அறுத்ததே இராவணனுக்கு கோபம் ஏற்படுத்திற்று. ஆதலால் சீதையைத் தொடாமல் சிறை எடுத்துச் சென்றான். தங்கையின் மூக்கு, காது அறுப்பவரை எந்த அண்ணன் ஏற்ப்பான்?)

சுக்ரீவனை தன் அண்ணன் வாலியிடம் இருந்து பிரித்து தனக்கு சாதகமாக மாற்றினார், வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றார்.  வாலியின் மனைவியை  தனக்கு உதவிய சுக்ரீவனுக்கு மனைவி ஆக்கினார்.(?) 63 கலைகள் பெற்ற இராவணனைக் கொன்றதால் "பிரம்ம கத்தி" தோசம் பெற்றார்.  (சான்றோரைக் கொன்ற அழியா பாவம்)  (பிரம்ம கத்தி விலகியதாக நூலில் கூறப்படவில்லை.) தன் நாட்டு மக்களில் ஒருவன் தன் மனைவியை தவறாக கூறியதால் தீயில் ஏற உத்தரவிட்டார். தன் மனைவி கர்ப்பமாக இருந்த  போதும் இரக்கமில்லாமல்  கானகத்தில் கொண்டு விட்டு விட்டார்.

இராமனுக்கு இப்படிபட்ட  மேன்மையுடைய (கடவுள்) குணம் இருந்ததாக கூறப்படுகிறது. சாதாரண சம்சாரி வாழ்க்கையைக் கூட வாழாதவர், பெண்களின் அங்கம் அறுப்பவர், சகோதரர்களிடையே  கோள் மூட்டுவது, அறிவோடையோரை கொல்வது, இரக்கமற்ற மனம் இது தான் கடவுளின் குணமா?  இப்படிபட்ட  இராமனை நாள் தோறும் எழுதுவதும், செபிப்பது முறையாகுமா?. இப்படிபட்ட கொடூரமான இராம காதையை எழுதிய வால்மீகியை இந்த உலகம் ஏற்றுக் கொண்டது வியப்பாக இருக்கிறது!!.இதை அறிந்த கம்பனும் அறிவுக்கும், தர்மத்திற்க்கும் புறம்பான இராம காதையை தமிழில் எழுதி தமிழ் தாய்க்கு ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டார். அறிவிற்க்கும், தர்மத்திற்கும் புறம்பான ஒன்றை நயம்பட உரைத்தால் இந்த உலகம் ஏற்கும் என்பது புலனாகிறது. வேதம், புராணம், இதிகாசம், ஆச்சாரம், மதம், சாதி, வழிபாடு இவற்றை விடுத்து அறிவு ஒன்றையே ஆயுதமாக கொண்ட சித்தர் மரபில் வந்த சிவவாக்கியர் மேற்படி அடாத செயல் செய்த   இராமனை வழிபட (செபிக்க)  சொல்லி இருப்பாரா? சற்று சிந்தனை செய்ய வேண்டும்.

மந்திரம் என்பது மறைமொழி  என்பர். சித்தர்கள் ஒன்றை குறிப்பின் மூலமே(பரிபாசை) உணர்த்துவர் என்பதை அறிவோம். மேலும் சிவவாக்கியர்

"மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ"


"உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்"


"வேதம் ஓது வேலையோ வீணானதாகும் பாரிலே"

"நூறு கோடி மந்திரம் நூறு கோடி யாகமம்
நூறு கோடி நாளிலிருந்து பாடினாலுமென் பயன்"



"மூச்சிரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ"
           
                                                                   என்கிறார்.

அப்படியென்றால் உண்மை என்ன? என்று ஆராய்ந்தால் அந்தி, மாலை, உச்சி வேளையும், தீர்த்தம், தர்ப்பனம், தபம், செபம், ஞானம் இப்படி எல்லாம் அறிவிக்கின்ற பொருள் எது என்றால்  "வாசி" ஆகும். அதுவே உயிருக்கு உறுதி தருவதாகும்.

 உண்மையான இராம நாமம் என்பது "இரு சுவாசம்" ஆகும்

ர- இரவி ( சூரியன்) (வலது மூச்சு)
ம- மதி( சந்திரன்) (இடது மூச்சு)


இதுவே "ரம" என்று வழங்கி வருவது. இதை "ராம" என்று இலக்கனத்திற்காக மருவி வழங்கி வருகின்றோம். இது வால்மீகி, கம்பன் காட்டிய இராமன்  இல்லை. இதை எப்படி செபிப்பது என்று குருவின் மூலம் அறிக. இதை விடுத்து புராண, இதிகாச இராமனை 1008 முறை செபித்தாலும், எழுதினாலும், சுந்தர காண்டத்தை சுருக்கமாக ஓதினாலும், நல்ல கதி வாய்க்காது.அப்படி செபித்தாலும், ஓதினாலும் வரும் பயன் துன்பமே. ஏனெனில் "எண்ணம் போல் வாழ்வு" என்பார்கள். எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய். புராண இதிகாச இராமனை நினைத்தால், நம் வாழ்வும் அவ்வாறே அமையும். அறிவுடையோர் சிந்தித்தது தெளிவு பெறுக.

"அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
கண்டகோயிலை தெய்வமென்று கையெடுப்பதில்லையே"


                                                                        சிவவாக்கியர்.

1 comment:

  1. வணக்கம், தங்களின் பதிவிற்கு நான் புதியவன்.
    வயதானவன்கூட, நான் அடிக்கடி சொல்வது ராம நாமம்
    தான். நீங்கள் குறிப்பிட்ட கம்பன் ராமன்தான். இந்த வயதில் நான் குருவைதேடி எங்கு செல்வது . எனக்காக
    நீங்கள் குருவாக இருந்து 'ராம'[ரம] செபிப்பது பற்றி கூற
    வேண்டுகிறேன் . அன்புடன் sv

    மெயில் id .... balasri36@gmail .com

    ReplyDelete

Total Pageviews

Followers