Saturday, March 24, 2012

சைவச் சிங்கம்



"புலி பசித்தாலும் புல்லை தின்னாது " என்பார்கள். சித்தர் போகர் பெருமான் விலங்கினங்களின் அரசனான "சிங்கம்" புல்லை தின்று  வாழ்ந்து வந்ததாக தனது பன்னிருகாண்டத்தில் கூறுகிறார். இது ஆச்சரியம் இல்லையா ?  இது உண்மை . சித்தர்கள் பொய் உரைப்பது இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன் போகர் பெருமான் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபட்டு இருந்தார். அந்த சமயத்தில் விலங்குகளின் அரசன் சிங்கம் ஒன்று போகர் பெருமானின் மடியை கல் என்று நினைத்து தன தலை வைத்து படுத்து கொண்டும், தன் நாவை கொண்டு தன் மேனியை நக்கி சுத்தம் செய்து கொண்டும் இருந்தது.  சமாதி  யோகத்தில் இருந்த போகர் பெருமான் சிங்கத்தின் அசைவாலும், பெருமூச்சு  காற்றாலும்.  தன் வாசியில் சலனம் ஏற்படுவதை   கண்டு உணர்ந்து தவத்தை கலைத்து கண் விழித்து பார்த்தார். தவ சக்தி மிகுந்து இருந்ததாலும், மனம் சற்று சலனப்பட்டதாலும் போகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்). அவர் கண்களில் இருந்து நீர் திவலைகளாக சிங்கத்தின் நாவில் பட்டன. அமுதச்சுவை பெற்ற சிங்கம் திடுக்கிட்டு எழுந்து, பின்பு பெருமானை மூன்று முறை வலம் வந்து வணங்கி நின்றது. சித்தர் போகரின் அமுத்திவலை பெற்ற சிங்கம் ஞானம் பெற்று விட்டது. அன்றிலிருந்து புலை சாப்பிடாமல் புல்லை உண்டு  வாழ்ந்ததாகவும் , தன் இனங்களை கூட்டி பெருமானுக்கு காவல் செய் 
வித்ததாகவும் போகர் பெருமான் கூறுகிறார். 

"போற்றியே அர்ச்சித் தஞ்சலி தான் பண்ணி 
பேரான சீவ செந்தைப் புசித் திடாமல் 
தோன்றியே புல் சருகு களைப்பு சித்து 
சிவசிந்தை மறவாமற் காத்திருந்து "
                                                                          என்கிறார்.

ஐந்தறிவு சீவனான அசைவ சிங்கம் சைவமாக மாறியதை இந்த மானிடர்க்கு உரைக்கின்றார். உபதேசங்கள் ஆயிரம் பெற்றாலும் புலை புசிப்பு இருப்பின் தவம் கெடும், " நன்றுக்கு ஆகாது உன்றன் உடல் சுவை கொன்றார் மனம்" என்பதை அறிக. ஓர் உயிர் என்பது விந்து, நாதம், கலை கலந்தது.  இது இறை அணுக்கள் எனப்படும். இதன் மூலம் தான் தோற்றம் உண்டாகிறது. ஆதலால் உயிர்களை "சீவன்" என்கிறோம்.  இவை பிரிந்தால் "சவம்" என்கிறோம். மனித தேகத்திலும், பிற உயிர் தேகத்திலும் சீவ அணுக்கள் நிறைந்தே உள்ளன. இவற்றை காப்பதே " சீவ காருண்யம் " ஆகும். 
இதை " பரனளிக்கும் தேகம் இது சுடுவது பாவம் " என்கிறார் வள்ளலார். 

"பிறருக்கின்னா முற்ப்பகல் செய்யின் தமக்கின்னா 
பிற்ப்பகல் தாமே விளையும்"

என்று வள்ளுவர் " செயல் விளைவை " எடுத்து காட்டுகிறார். தாவரத்திற்கும் 
உயிர் இருக்கின்றதே என்று கேட்பது புரிகிறது. பெரியோர்கள் "மாமிசம்" உண்பது "குற்றம்"  என்று "சும்மா" சொல்லிருப்பார்களா?.  அறிவுடையோருக்கு இதுவே பதில்.

" கொல்லா நெறியே குருவருள் நெறியென 
பலகால் எனக்கு பகர்ந்த மெய்சிவமே "
                                                                                வள்ளலார்.

"பத்தியால் யோகம் சாரும் யோகத்தால் பரம ஞானஞ்
சித்தியாம் இதற்க்கு ஆதாரம் சீவ காருண்யமன்றோ" 
                                                                                                   சீர்காழி கண்ணுடையார் 

"பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் 
மற்றோர் அணுக்களை கொல்லாமை ஒண்மலர்"
                                                                                            திருமூலர்.

"கொலை புலை செய்வோரை சாராதிருப்பதே தயவு " 
                                                                                                            நெருஞ்சில் சித்தர்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers